dimanche 23 septembre 2007

samedi 1 septembre 2007

எனது தந்தை, பொன்னர்

எனது தந்தை, பொன்னர்
- கனக்ஸ் -

அது ஒரு குக்கிராமம். ஏறக்குறைய ஐம்பது வீடுகளைக் கொண்டது. இன்னும் டாடி, மம்மி நாகரீகம் எட்டிப்பார்க்காமையால், நான் தந்தையாரை அப்பு என்றே அழைப்பேன். இரண்டாவது உலகப் போர் முடிய மலாயாவிலிருந்து எம் ஊருக்கும் மூன்று நான்கு குடும்பங்கள் மூட்டை முடிச்சுடன் வந்து இறங்கின. இதிலே ஒரு குடும்பத்து பெண்தான் இந்த டாடி, மம்மி பண்பாட்டினை நம்மூரில் புகுத்தியவர்.‘நன்றி மறப்பது நன்றன்று’ என்பதை நன்றாகவே உணர்ந்தவர்கள் நம் கிராமவாசிகள். எனவே, சிறிது நாகரீகத்தை எமது சிற்றூரின் வாழ்வியலில் புகுத்தியதன் நன்றி உணர்வினுக்காக இன்று வரை ஊரார் யாபேரும் அந்தப் பெண்மணியை, ‘மம்மி’ என்றே கௌரவமாய் அழைத்துத் தம் நன்றியறிதலைப் புலப்படுத்துகிறார்கள்.அப்பு ஆறடி உயரம். கொஞ்சம் கூட ஊனச் சதையற்ற வச்சிரம் போன்ற திடகாத்திர உடல்வாகு, தினசரி குறைந்தது ஒன்பது மணித்தியாலங்களாவது ‘மழையால் நனைந்து, வெய்யிலால் உலர்ந்து’ கழனியில் (வயல், தோட்டம்) கடின உழைப்பின் பெறு பேறு. அன்றைய கால விவசாயிகளுக்கே உரித்தான நெடிய தலை முடி பின்னே குடுமியாக நிற்க முன்னே வழித்ததலை. ஆக ‘ நீட்டலும் மழித்தலும்’ காணப்படவே செய்தது. கறுப்பு என்று சொல்லாவிட்டாலும் பொது நிறத்திற்குச் சற்று கூடுதலாக அந்தப் பக்கம். வெய்யிலில் நின்று உழைப்பவர்களுக்குக் கருமை நிறம் பாதுகாப்பான நிறமல்லவோ, எனவே, அந்த நிறம் வரப்பிரசாதம் தானே! சேட்டுப் போட்டதில்லை. ஓரெ ஒருமுறைதான் அவரைச் சேட்டுடன் பார்த்தேன். எனது மூத்த சகோதரர் இளம் வயதிலேயே மலேசியா சென்று விட்டார். அவரது தாய் மாமன் அவரைத் தன்னுடன் கூட்டிச் சென்று விட்டார். அவர் அங்கேயே தொழில் பார்த்து தனது மாமா மகளையே கல்யாணமும் செய்து அங்கு வாழ்ந்து வந்தார். ஊருக்கு வந்த போது குடும்பப் படம் ஒன்று எடுத்துச் சென்று தனது நண்பர்களுக்குக் காட்டவேணும் என்று ஆசைப் பட்டார். அப்புவை வெற்றுடம்புடன் காட்ட விருப்பமில்லாமையால் சேட்டைப் போடுமாறு பணித்த்தார். நாங்கள் கேட்டிருந்தால் மறுத்திருப்பார் ஆனால் கேட்டது மலேசியா மகனல்லவா.சம்மதித்தார்.பின்னர் அந்தச் சேட்டைக் கத்தரி வெருளிகுப் போட்டு தோட்டத்தில் விட்டு விட்டார்.மூன்று வேளையும் சோற்றினையே உட்கொள்ளும் பாங்கு. கேட்டால், ‘கஞ்சி கடப்படி, கூழ் குடத்தடி, தோசை கிணத்தடி, புட்டுப் பட்டணம், சோறு சொன்ன இடம்’ எனும் வக்கணை பேசும் திறன் உண்டு. உட்கொள்ளும் மாப்பொருள் யாவும் அன்றாட வேலையால் எரிக்கப் பட்டு விடுவதால் சதையின் இன்சுலினுக்குத் தன் வேலையைக் காட்டும் வாய்ப்பு இல்லாமையால் சலரோகம் எங்கே எட்டிப் பார்ப்பதாம்.பல் முப்பத்தி இரண்டும் இறுதிவரை கல் மாதிரியே இருந்தன.சிறிது கூட ஆட்டம் காட்டவில்லை.காலையில் வேப்பம் குச்சி அதற்கு வழிவகுத்தது. என்பார். அவர் காலால் பிறந்தவராம். இடது கால்தான் முதலில் வந்ததாம். அப்படிப் பிறப்பவர்கள் சுளுக்கு எடுப்பதில் வல்லவர்கள். முதலில் வெளியே வந்த காலால் சுளுக்குப் பட்ட இடத்தில் எண்ணை தடவி உருவி விடுவார்கள். சுளுக்குப் சரியாய்விடும்.ஒரு நாள் இரவு 7:00 மணி இருக்கும். நான் படிப்பதாய் பாசாங்கு பண்ணியபடி தலைவாசலில் உட்கார்ந்து இருந்தேன். ஐயாத்துரை என்பவர் கொக்குப் போலக் கழுத்தை நீட்டியபடி உள்ளே வந்தார். ஆள் நல்ல கறுவல் கழுத்து முழுக்க எண்ணை வழிய வழியப் பூசியபடி வந்து நின்றார். ‘என்ன வி~யம்’ என்றேன். ‘பொன்னண்ணை இல்லையோ’ என்றார். ‘அவர் தோட்டத்துக்குப் போய் விட்டார் வருகிற நேரம் தான்’ என்றேன.; ‘ அப்ப நான் திண்ணையில் இருக்கிறேன், வந்திடுவார் தானே’. அவர் கொழும்பில் வேலை பார்க்கிறவர். லீவில் வந்தவர், வந்தோம் போனோம் என்றிருக்கப் படாதோ, ஊர்ப் பெடியங்களுடன் கிளித்தட்டு விளையாடினாராம். பழைய கோபம் கீபமோ, இவர் உச்சியோட முனைய துரைரத்தினம் கழுத்திலே போட்டானாம் ஒரு போடு. அதற்குப் பின் அவருக்கு நேர்ப் பார்வை ஒன்று தான் வருகிறது. கழுத்து தடி வைத்துக் கட்டியது போல நேராக நிற்கிறது. அதோ அப்புவும் வந்து விட்டார். தோளில் மண்வெட்டி,தோட்டத்தில் வேலை செய்ததற்கு அறிகுறியாக கால் கை எல்லாம் ஒரேமண். மண் வெட்டியை ஒரு பக்கமாக வைத்தவர். ‘என்ன ஐயாத்துரை’ என்றா.; ‘ ஒன்றும் இல்லை அண்ணை, இந்தக் கழுத்திலை’ என்றார். ‘எங்கை விடு பார்ப்போம்’. ‘இல்லை அண்ணை, நீங்கள் போய் கையைக் காலை கழுவிப் போட்டு வாருங்கோவன்’. ‘ அப்படிச் செய்தால் ஒன்றும் சித்தியாகாது, நீ கொஞ்சம் பொறுமையாய் இரு’ என்று கூறியபடி கழுத்தினைச் சற்று திருப்பினார். ‘ஐயோ அண்ணை, கொஞ்சம் மெதுவாக செய்யுங்கோ, சரியா நோகுது’ என்றார் ஐயாத்துரை. அப்பு தலைவாசல் வளையை ஒரு கையினால் பிடித்தபடி தனது இடது காலைத் தூக்கி ஐயாத்துரையின் கழுத்திலே மெல்ல ஒரு அமுக்கு. ‘ஐயோ’ என்ற குரல் அசரீரியாக மாத்திரம் கேட்டது. அங்கே பார்த்தேன். ஐயாத்துரையை எங்குமே காணமுடியவில்லை. அப்பு மாத்திரம் ‘காலைத்தூக்கி நின்றாடிய தெய்வமாய்’ நின்ற இடத்திலே நிற்கிறார். என்ன நடந்தது? வாமனா அவதாரத்தில் கிரு~;ண பரமாத்மா இப்படித்தான் காலை வைக்க மகாபலி பாதாளம் போன கதைதான் மீள நடக்கிறதோ? ஆனால் அங்கே தலையில் அல்லவோ காலை வைத்தார். இங்கே தோள்மேல் தான் கால் வைக்கப் பட்டது. இது கலிகாலம். எட்டிப் பார்க்கிறேன். நிலத்தில் ஏதேனும் அடையாளம் தெரிகிறதா என. சிறிது நேரத்தில் பக்கத்து, முன்வீட்டுக்காரர் மூலம் விசயம் வெளிச்சத்துக்கு வந்தது.‘என்ன கொழும்பு ஐயாத்துரை அலறியபடி திரும்பிப் பார்த்துக் கொண்டு உந்தப்பக்கத்தால் ஓடுகிறான்’என அவர்கள் கேட்டதும் உண்மை தெரிந்தது. அதற்குப் பின் அவர் வைத்தியம் பார்க்க வரவில்லை. கால் உழக்கினால் சுளுக்குச் சரி வந்ததோ அல்லது ஓடும் பொழுது திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு ஓடியமையால் கழுத்து இயல்பு நிலையை அடைந்ததோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.இது கைமருந்து அப்புவிடம் இன்னொன்றினுக்கும் வைத்தியம் பார்க்க வருவார்கள்.அதற்கும் காலால் பிறந்ததற்கும் ஏதேனும் தொடர்பு உண்டோ என என்னைக் கேளாதீர்கள். அது கால் வைத்தியம் இல்லை கை வைத்தியம். உண்ணாக்கு என்பது வாய்க் குழியின் கூரையில் இருந்து தொங்கும் ஒரு சிறிய சதைப்பாங்குடைய சிறு சோணை. சிலருக்கு சில சமயங்களிலே உண்ணாக்கு சற்று நீட்சி;றும்.அது சூட்டினால் எனக் கூறுவார்கள். நாக்கு மேல் நோக்கி உயரும் போது நீட்சியுற்ற உண்ணாக்கில் பட இம்சையாக இருக்கும். தொடர்ச்சியாக இருமல் வரும். அப்படியான உபத்திரவம் உள்ளவர்கள் அப்புவிடம் வருவார்கள். அவர்களின் தலையின் உச்சியிலே இரண்டு மூன்று மயிர்களைப் பிடுங்கிய பின்னர் அவ்விடத்திலே முடிதும்பை எனும் ஒரு பூண்டின் இலையினால் நன்கு உரஞ்சி விடுவார். வாய் பேசாமல் செய்தால்தான் நாணமாம். இரண்டு மூன்று நாட்கள் இப்படிச் செய்ய உண்ணாக்கு சுய நிலைக்கு வந்து விடுமாம்.எனது தாத்தாவைப் போன்று இவருக்கும் வடக்கன் மாடு வைத்திருப்பதில் அலாதி பிரியம். பெரிய வண்டில். அதற்குக் கழற்றி வைக்கக் கூடிய கூடாரம். மாடுகளின் எண்ணை பூசி மினு மினு என மினுங்கும் சற்றே வெளி வளைந்த வெள்ளைக் கொம்புகளைச்சுற்றி வெள்ளியினாலான சங்கிலி, தோல் மடிப்பாகத் தொங்கும் கழுத்தினைச் சுற்றி கலகலவெனச் சத்தமிடக் கூடிய வெண்டையங்கள் கொண்ட வெள்ளிச் சங்கிலி, கொம்புகளுக்கிடையே பெரிய பட்டுக் குஞ்சம். மூன்றடி நீளமான பிரப்பந்தடியுடன் அப்பு கம்பீரமாக ஆசனத்தட்டில் அமர்ந்து கொள்ள, சல சல எனும் சலங்கைச் சத்தம் சடசடவென்ற சில்லுச்சத்தத்துடன் லாடம் அடித்த கால்களால் மாடுகளின் பவனியில் நாம் உள்ளே இருந்து கொண்டு பயணணம் செய்யும் பொழுது ஏற்படும் குதூகலத்துக்கு இணையாக நான் பின்னர் ஆகாய விமானத்தில் பயணித்த போதும் அனுபவித்ததில்லை. அவருக்கு பெரிதாககடவுள் விசுவாசம் இல்லை ஆனால் நாஸ்த்திகரல்லர். வருடத்தில் ஒரு முறை பன்றித் தலைச்சி அம்மன் கோவிலுக்குக் கட்டாயம். போவார் பன்றித் தலைச்சி அம்மன் கோவில் மட்டுவிலில் உள்ளது. அதற்கு ஒரு ஸ்தல புராணமும் உண்டாம். புதைக்கப் பட்ட மாட்டுத் தலையினை பன்றித் தலையாக அந்த அம்மன் மாற்றியதாகச் சொல்வார்கள். மாடு வளர்ப்பவர்கள் பெரும் பாலோர் அங்கு சென்று பொங்கல் வைப்பது வழமை. பங்குனி மாதத்துத் திங்கட்கிழமைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. எமது ஊரில் இருந்து ஆறு ஏழு வண்டில்கள் ஞாயிற்றுக் கிழமை மாலை அப்புவின் தலைமையில் புறப்பட்டுச் செல்லும். எம்போன்றோர் ஆவலுடன் எதிர் பார்த்து நிற்கும் வருடாந்த பிக்னிக் இதுதான். விடியற் காலை கோவிலைச் சென்றடைவார்கள்.மோதகம் அவித்து பொங்கல் வைத்து படைத்த பின் மதியம் மீண்டும் பயணம் ஆரம்பிக்கும். எல்லோரும் மட்டுவில் முட்டிக் கத்தரிக்காய் வாங்கிக் கொண்டு வருவார்கள். கோள வடிவினதாக, வெள்ளை, கத்தரிப்பூ நிறங்களிலே பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். வருகிற வழியில் நிலாவரை கட்டாயம் பார்க்கின்ற ‘பிக்னிக் ஸ்தானம்’. அதன் ஆழம் பற்றியும் அதன் உள்ளே போடப் பட்ட எலுமிச்சம் பழும் கீரிமலையில் மிதந்ததாகவும் கூறப்படும் கதை வருடாவருடம் எமக்குச் சொல்லப் பட்டாலும் வாயைப் பிளந்தபடி அதனைக் கேட்பதில் ஒரு ஆனந்தம் இருக்கவே செய்தது. அது காதலா?இந்த வடக்கன் மாடுகள் இந்தியாவில் காங்கேயத்தில் இருந்து வாங்கி வருவார்களாம். அனேகமாகப் பருத்தித்துறையிலே கொண்டு வந்து இறக்குவார்கள்.இளம் நாம்பன் மாடுகளாகக் கொண்டு வருவார்கள். ஆகவே இறக்கி கடலில் நடத்திய படியே கரைக்குக் கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள். அப்படி நடத்திக் கொண்டு வரும்போதே மாட்டுக்கு நலம் போட்டு விடுவார்களாம். இங்கே நலம் போடும் பொழுது மாட்டின் விதையினைக் கைளால் கசக்கிக் கரைத்து விடுவார்கள்.மாடு நீரில் உள்ளமையால் அதனால் ஒன்றும் எதிர்த்துப் போராட முடியாது. வன்னி மாடுகளுக்கு நலம் போடுதலுக்கு வித்தியாசமான முறையினைக் கையாள்வார்கள். மாட்டின் நான்கு கால்களையும் கட்டி அதனை வீழ்த்திய பின்னர் ஏ போன்று இடுக்கி அமைப்பிலே கட்டப்பட்ட இரு தடிகளுக்கிடையே விதையினை வைத்து நசுக்கிக் கரையச் செய்து விடுவார்கள். நாய்களுக்கென்றால் விதைப் பையினை வெட்டித் திறந்து விதைகளை முற்றாகவே அகற்றி விட்டு உள்ளே சாம்பல் வைத்துத் தைத்து விடுவார்களாம். பார்க்கும் பொழுது குரூரமாயும் கொடுமையானதாகவும் தெரிந்தாலும் நலமிடுதல் வீரியத்தைக் கூட்ட உதவும் என அவர்கள் நம்பினார்கள். மகாத்மா காந்தி கூட நலமிடுதலை அங்கீகரித்துள்ளார்.வடக்கன் மாடுகளுக்கும் வன்னி மாடுகளுக்கும் தொழில் ரீதியாக இரண்டு வேறுபாடுகள் உள்ளன. வடக்கன் மாடுகள் வண்டிச் சவாரிக்கு உபயோகப் படுவதில்லை. அவையால் வேகமாக ஓடமுடியாது. வன்னி மாடுகளே வண்டிச் சவாரிக்கு உபயோகிக்கப் படுவன. சூடுமிதித்தலுக்கும் பொதுவாக வடக்கன் மாடுகள் உபயோகிக்கப் படுவதில்லை. யானை வைத்துச் சூடு மிதித்தலை இலக்கியங்களில் தான் காணலாம். நம் ஊர்களிலே மாடுகளே சூடுமிதித்தன. வன்னி மாடுகள் தான் பொதுவாக பயன்படுத்தப் பட்டாலும் சில சமயங்களிலே வடக்கன் மாட்டினை முதல் நடக்கும் பொலி மாடாகப் பாவிப்பார்கள்.எருது மாடுகள் விலைக்கு வாங்குதற்கும் அப்புவின் உதவியைப் பலர் நாடுவதுண்டு. மர்ட்டின் விலையைக் கணிப்பதற்கு அதன் வயதினை நிர்ணயம் செய்ய வேண்டும். வயதினை எப்படிக் கணிப்பார்கள் nதிரியுமா? மாடு கடைவாய் போட்டு விட்டதா என அதன் வாயுள்ளே கை வைத்துப் பார்ப்பார்கள். கடைவாய் என்பது அரைக்கும் பற்களான கடைவாய்ப் பற்கள். இவை கன்று பிறக்கும் போது இருப்பதில்லை. பின்னரே முளைக்கின்றமையால் மாடு வளர்ப்பதில் தேர்ந்N;தார்கள் கடைவாய்ப் பற்களின் விருத்தி நிலையை வைத்தே மாடுகளின் வயதினை சந்கேத்துக்கு இடமின்றிக் கூறிவிடுவார்கள். அப்பு இதில் விற்பன்னர்.அவர் கூறினால் மறு பேச்சில்லை. மாடுகள் இரைமீட்பவை. அவை பொதுவாக அவசரமவசரமாகப் பகலில் உணவை உட்கொண்டு பின்னர் இரவில் நிம்மதியாகப் படுத்தபடி கவளம் கவளமாக உணவை மீண்டும் எடுத்து ரசனையுடன் மெல்லுகின்றன. அப்பொழுது தான் கடை வாய்ப்பற்கள் உபயோகிக்கப் படுகின்றன.அப்பு சொல்லுவார் ‘ சில வம்பிலை பிறந்ததுகள் இரவிலே மாடு இரை மீடு;கும் பொழுது கையைவிட்டு கவளங்கள் சிலவற்றை எடுத்து வெளியாலே போட்டு விட்டு, மறுநாள் வந்து சொல்லுவார்கள், மாடு இரை கக்கிறது எனவே கடைவாய்ப் பல் சரியில்லை என விலயைக் குறைப்பதற்குப் போரம் பேசுவார்கள்’. அதைப் பொய் என நிரூபிப்பதற்கு அப்பு சிலசமயம் மாடு வாங்கியவர் வீட்டிலே இரவு தங்க வேண்டியும் வருவதுண்டாம். அப்படித் தங்கப் போனதில் அப்புவுக்கு ஒரு அதிரு~;டம் அடித்ததாக அம்மா கூறுவார்.கார்த்திக்கேசுக்கு அடுத்தடுத்து நாலு பெண்கள்.சும்மா சொல்லக் கூடாது நர்லும் கொஞ்சம் அம்சமான பெண்கள் உன்னைப்பார் என்னைப் பார் என்று. கார்த்தி, ‘கோழி மேச்சாலும் கோர்ணமெந்து உத்தியோகம’; என்ற தத்துவத்தில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினார் ஆனால் ஒரு கல்யாணம் ஒப்பேற்றவே ஏழு செருப்புத் தேயுமாம், அப்போ இருபத்தி எட்டுச் சோடிச் செருப்புக்கு அவர் எங்கே போவார். எனவே மெல்லக் கொஞ்சம் கீழே இறங்கி வந்தார் கார்த்தி.வசமாக மாட்டிக் கொண்டார் அப்பு. அப்பு மாட்டுத் தொழுவத்தில் மாட்டைப் பார்ப்பதோடு நின்று விட அவரென்ன விசுவாமித்திரரா? அடுக்களைப் பக்கம் நாலு மேனகைகள் ஒருங்கே நிற்பது கண் கொள்ளாக் காட்சி. அன்று மாடு ஓழுங்காக இரைமீட்டது. ஆனால் அப்புவோ மறுநாளும் வந்து பார்த்துத்தான் பற்களைப் பற்றி ஊர்ஜிதம் செய்யலாம் என்று கூறி மறுநாளும் பிரசன்னம்.காரணம் கார்த்திக்குப் புரியாமல் இல்லை. இது மாத்திரமல்ல அதன் பின் அப்பு தோட்டம் போகின்ற பாதையே இந்த ஒழுங்கைதானாம். மர்டுகளில் சலங்கை ‘ஜல், ஜல்’ எனச் சத்தமிட அப்பு கடைக்கண்ணால் கார்த்தி வீட்டைப் பார்த்தபடி நடப்பது வெகுநாள்நீடிக்கவில்லை. கார்த்தி இயமனைப் பச்சடி போட்டவர்.வீரபத்திரரையே அடிபணிய வைத்தவர். எப்படி? எமது கிராமத்தின் மூன்று திசைகளிலும் காவல் தெய்வங்களாக வைரவர் ஆலுக்கும் அரசுக்கும் கீழ் குந்தியிருக்க மேற்கு எல்லையில் மாத்திரம் ஒரு வீரபத்திரர் எங்குமே காணாத வித்தில் எழுந்தருளி காவல் பணியினை மேற் கொண்டுள்ளார். இந்தச்சிறு ஆலயத்தைப் பராமரிப்பது கார்த்தி. காலையில் கூட்டித் துப்பரவாக்கி மாலையில் விளக்கோற்றுவது எல்லாம் ஒழுங்காககச் செய்து வீரபத்திரரையே குலதெய்வமாகக் கொண்டார்.ஒவ்வொரு முறையும் பெண் குழந்தை பிறக்கும் பொழுது அடுத்தமுறை வீரபத்திரர் ஆண்பிள்ளை தருவார் என்று கூறியபடி தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டார். முயற்சி திருவினையாக்கும் என்பது உண்மை ஆனால் வீரபத்திரர் தொடர்ந்து காலை வாரிவிட நாலாவதும் பெண் என்றதும் கார்த்திக்குச் சொல்ல முடியாத கோபம்.வந்த கோபத்தில் என்ன செய்கிறோம் என்றே உணராமல் கோவில் கூட்டும் விளக்குமாறால் வீரபத்திரருக்குச் சாத்தோ சாத்தென்று சாத்திவிட்டதுடன் விளக்கு வைப்பதையும் நிறுத்திவிட்டார். இது தெய்வ நிந்தை என்று எத்தனை பேர் எடுத்துச் சொல்லியும் அவர் மனம்மாறவில்லை. எனவே வேறொருவர் பராமரிப்பை மேற் கொண்டார். ஆனால் ஆச்சரியம்! சரியாகப் பத்தாவது மாதம் கார்த்தியின் சகதர்மிணி ஓர் ஆண்மகவுக்குத் தாய். ஊர் வாயைப் பிளந்தது. பிளந்தவாய் மூடப்படாமல் மேலும் மேலும் ஆச்சரியங்கள் நடந்தன, அடுக்கடுக்காய் அடுத்து நான்கு பிள்ளைகள் எல்லாமே ஆண்கள். ‘அடியில்லாவிட்டால் அண்ணன் தம்பி உதவான’; என ஊரே ஒப்புக் கொண்டது. கார்த்தி மீண்டும் கோவில் பராமரிப்பை மேற்கொண்டார். அப்படிப் பட்ட கார்த்தியிடமிருந்து அப்பு எப்படித் தப்புவதாம். ‘கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு’ என அம்மா சொல்லாமலேயே சட்டுப் புட்டு என எல்லாம் முடிந்து விட்டது. கார்த்திக்கும் ஏழு செருப்பு மிச்சம். அந்தப் பெரிய குடும்பத்தில் மூத்த மாப்பிள்ளையாய் அப்பு புகுவதில் தாத்தா தம்பருக்கு அவ்வளவாக சம்மதம் இல்லை என்பது உண்மை.அப்புவின் சயிக்கிள் பிரயாணம் அப்புவுக்குச் சைக்கிள் ஓட்டத் தெரியாது.அவரிடம் தானே பு~;பக விமானத்தை ஒத்த வண்டி உள்ளது. பிறகு ஏன் வேறு வாகனங்கள்.எனவே சைக்கிளில் பின்னுக்கும் இருந்து போனதில்லை. ஒரு நாள்.அவசரமாக ஒருவர் வந்தார். கொத்தியாவத்தையில் ஒரு மாடு பார்க்க வேணும் என்றார். எப்படிப் போவது? தனது சைக்கிளில் அப்புவைப் பின்னுக்கு இருக்கு மாறு கேட்டார்.அப்புவுக்கோ அதில் பழக்கம் இல்லை.அவருடைய சைக்கிளின் பின்ஆசனம் சந்தைக்குச் சாமான் கொண்டு போவதற்கு இசைவாக சற்று அகலமாக அமைந்தது. எனவே அப்புவை ஒரு மாதிரியாக அதில் ஏறி இருக்கப் பண்ணி தான் ஏறி கவனமாக மிதித்துக் கொண்டுசென்றார். சிறிது தூரம் சென்றதும் இருவருமே பரிச்சயப் பட்டு விட்டதால் கதைத்த படி சென்றார்கள். அப்பு ஆசனத்தின் பிற்புறத்தைக் கெட்டியாகப் பிடித்தபடி இருந்தவர் கையை விட்டு விட்டு இருக்க தொடங்கி விட்டார். கதை மும்முரத்தில்காலையும் நீட்டிவிட நீண்ட அவர் கால்கள் தெருவோரத்தில் நடந்த ஒருவரைப் பதம் பார்த்தது மாத்திரமல்ல அப்புவையும் வீதியிலே பத்மாசனம் போடவைத்தது.சைக்கிள் ஓடியவருக்கு நடந்தது ஒன்றும் தெரியாத கதை மும்முரம். சிறிதூரம் போனபின்னர் தான் பக்கப் பாட்டு வரவில்லையே என எண்ணி “என்ன பொன்னண்ணை, பேச்சு மூச்சைக் காணவில்லை, நித்திரையோ’ என்றார். குரல் இல்லை.பொன்னன்ணைக்கு என்ன நடந்தது.சயிக்கிளைத் திருப்பி வேகமாக வந்தார்.' பாழாப் போனவங்கள் கரையாலே நடங்தால் என்ன' என பொன்னண்ணை வசை பாடிக் கொண்டிருந்தார். பொன்னன்ணை குண்டியில் அடிபட்டு வீதி ஒரத்தில் இருப்பது அவருக்குத் தெரிய சிறிது நேரம் எடுத்தது. அப்பு உளுக்குப் பார்க்க யாரிடமும் செல்லவில்லை. ‘ஐயோ,ஐயோ’ என அலற அலற அம்மா தான் நோ எண்ணை போட்டு இரண்டு மூன்று நாட்கள் உருவிவிட்டா.அப்பு மாதம் ஒரு முறை முழுகுவார். அன்றைய தினம் அவர் முற்றாகவே ஓய்வெடுக்கும் தினம். அது ஒரு வைபவம் போல இருக்கும். காலையில் உண்பதில்லை. பத்து மணியளவில் தலை உடல் எல்லாம் வழிய வழிய எண்ணெய் பூசி உடல் ‘மசாச’; செயப்படும். பின்னர் பன்னிரண்டு ஒரு மணியளவில் அரப்பு உடன் சேர்த்து அவிக்கப் பட்ட இரு எலுமிச்சம் பழங்கள் தலைக்கும் உடலுக்கும் பூசியபின் அரப்பு தலைக்கு பூசப்படும். இவ்வளவும் அம்மாவின் வேலை. பின்னர் அவசர அவசரமாகக் கிணற்றில் இருந்து வாளியால் தண்ணீர் அள்ளி அள்ளி தலையில் ஊற்றுவார். சவர்க்காரம் உபயோகப் படுத்தப் படுவதில்லை. ஆனால் அருகே உள்ள கமுகு முதுகு உரஞ்சப் பயன் படும். நம் ஊர்களில் அநேகமாக எல்லா வீடுகளிலுமே கிணற்றடியில் ஒன்றோ இரண்டோ கமுக மரங்கள் இருக்கும். வீதி ஓரத்தண்ணீர்;த்; தொட்டிகளில் நீர் குடிக்கும் கால் நடைகளின் உடலை உரோஞ்சுவதற்காக ஆவுரோஞ்சிக் கற்கள் உள்ளதோ அதே போன்று தான் குளிப்பவர்கள் தமது முதுகை உரோஞ்சுதற்காக கிணற்றடியில் கமுக மரங்கள் வைத்திருப்பார்கள். அதில் ஒன்று தான் வீட்டுக்குரியவர் இறந்தால் பாடை செய்வதற்காகத் தறிப்பார்கள்.ஏனைய மரங்கள் போலல்லாது கமுகு மழுமழுப்பானது. எனவே முதுகு உரோஞ்ச இதமானதாக இருக்கும்.முழுகி உடல் துவட்டு முன்னரே அம்மா கையில் ஒரு கிண்ணம் நிறையச் சரக்குத் தண்ணியுடன் நிற்பார். நன்றகச் சரக்கு உள்ளி வைத்து அரைத்து நன்கு வற்றக் காச்சிய அதில் இரண்டு மீன் துண்டும்இருக்கும். அதனைக் குடித்த பின்னரே உடல் துவட்டப் படும். உடல் துவட்டியபின் ஒரு பத்து உள்ளிப் பூடுகள் சுட்டு வைத்திருக்க அதையும் உட் கொண்ட பின் தான் மதிய உணவு. அவர் இறைச்சி உண்பதில்லை. எனவே மீன்கறிதான். ஆனால் கத்தரிக்காய் பால்கறி முக்கியம். சாப்பிடு முன் அக்கறியுள் இரண்டு மேசைக் கறண்டி நல்லெண்ணை விட்டால்தான் சாப்பாடு முழுமை பெறும். இதன் காரணமாகத் தானோ இறுதிவரை உடல் வைரம் பாய்ந்ததாகக் காணப் பட்டது.

vendredi 24 août 2007

கவிதைகளைக் கடன் தந்து காற்றோடு கலந்துவிட்ட கதிரேசர்
(இளவாலை விஜயேந்திரன்)

ஆஹோ, வாரும பிள்ளாய். இற்றைக்கு சற்றேறக் குறைய இருபது வருடங்கள் முன்னான ஒரு குட்டிக்கதை சொல்வேன். கேளும். அது ஒரு பின்னேரம். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வசந்தகால பின்னேரங்களில் ஒன்று. தெல்லிப்பழை என்று கூறப்பட்டாலும்அம்பனைப் பெருவயல் வெளிகளின் ஓரத்தே அமைந்திருந்தது அந்தக் கல்லூரி. அதனைப் பட்டிக்காடு என்று பரிகசிப்போரும் அக்காலத்தில் இருந்தனர். கல்வி, கலை, இலக்கியம், விளையாட்டு என்று சகல துறைகளிலும் பட்டணத்திற்குச் சவால்விட்ட ஒரு பட்டிக்காடு தான் கேளும்.
அக் காலம் கிறிக்கெட் என ஆங்கிலத்திலும் துடுப்பாட்டம் எனத் தமிழ்பிரியர்களாலும் அழைக்கப்பட்ட ஓர் ஆட்டத்தின் பயிற்சி நிகழ்ந்துகொண்டிருந்தது அந்த மாலையில். பயின்றோர் பாதி இளைஞர்கள். பாதி சிறுவர்கள். அல்லது பதின்பருவத்தினர் என்றே கூறலாம். படிப்பில் சாதிக்காவிடில் விளையாட்டிலாவது சாதித்துத் தமது மனங்கவர் இளைஞிகளின் கவனம் ஈர்க்கும் எண்ணம். மனம் நிறைந்த பருவம். பயிற்றுவித்தவர் பந்தை உயர்த்தி அடிக்காமல், நிலமட்டத்திற்குச் சமாந்தரமாக அடிக்குமாறு கூறினார். தயாளன்தான் அடித்தவன். பந்து உயர்ந்துவிட்டது. பயிற்றுவித்தவர் பேசினார். 'டேய், நிலத்துக்குப் pயசயடடநட ஆயெல்லோ அடிக்கச்சொன்னனான்." தயாளன் வஞ்சகமில்லாமல் சொன்னான். 'ஓமண்ணை, பரவலாத்தான் அடிச்சனான். அது உயர்ந்து போச்சு." சமாந்தரம். பரவலான குட்டிக்கதை இது. பரலல் என்ற ஆங்கிலச்சொல்லுக்கும் பரவல் என்ற தமிழ்ச்சொல்லுக்கும், உச்சரிப்பில் ஒரு சின்ன வித்தியாசம்தான். எனவே தயாளன் பேச்சு வாங்காமல் தப்பியதோடு அது ஒரு நகைச்சுவையாகவும் போயிற்று. தமிழில் 'ல"கர, 'ள"கர பேதங்களில் தடுமாறுவது வழக்கம்தான். தயாளன் மொழிகடந்து லகர, ளகர பேதங்களில் தடுமாறிவிட்டான் . அவ்வளவுதான்.
ஒரேமாதிரியான, அல்லது ஓரளவு ஒற்றுமையான உச்சரிப்பு உடைய எழுத்துக்களில் பேதம் கண்டுபிடிப்பது சிலருக்குச் சிரமமாக இருப்பதை அவதானித்திருக்கிறேன். உண்மையில், தமிழின் லகர, ளகர, ழகர பேதங்கள் மனதில் படமாகப் படிந்துவிடுவன. ரகர, றகர பேதங்களும் இப்படியே. பிரச்சனை எங்கு ஆரம்பிக்கிறது என்றால் ஒவ்வொருவரும் தமது மனதினுள் வைத்திருக்கும் இந்தப் படத்தில் எவ்வாறு லகர, ளகர, ழகரங்கள் பதிந்திருக்கிறது என்பதுதான். நல்லவேளையாக எனதுநிலை குறைந்தபட்சம் இந்தவிடயத்தில் கவலைக்கிடமில்லை. கசடறக் கற்பதுதான், மொழியின் இந்த நுணுக்கங்களை மறவாது படமாக்க உதவக்கூடியது. தமிழில் எத்தனையோ அற்குதங்கள் இருந்தாலும், இது சிலருக்கு வில்லன மாதிரி. எனக்குத் தெரிந்த இலக்கிய நண்பரொருவர் (மிகப் பிரபலமானவர்) பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய படைப்புடன் ஒரு கடிதம் வைத்திருந்தார். அதில் 'எளுத்துப் பிளைகள் இருந்தால் திருத்திவிடுங்கள்" என்று இருந்தது. அவரது படைப்புகள் பிரசுரமாகாத பத்திரிகைகள் இல்லை. அவற்றின் ஒப்புநோக்குனர்களுக்கும், அச்சுக் கோப்பவர்களுக்கும் இவரது படைப்புகள் பீதியை உருவாக்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், எழுத்தாளர் தனது மனதில் அந்த ளகரப் படத்தை நீண்டகாலமாகவே அகற்றவில்லை என்பது அண்மையிலும் நான் அறிந்தது.
எனது வகுப்பில் படித்தவர்களில் பெரும்பாலோர் லகர, ளகரப் பிரச்சனைகளில் குறைவாகவே மாட்டுப்படுவர. என்று நான் உறுதியாக நம்புகிறேன். காரணம் அவர்களுக்குப் படம் பிடித்துக் கொடுத்தவர், கதிரேசர். வாசிக்கும்போது 'உதிலை என்ன இருக்கு ழானாவோ, ளானாவோ" என்று வாத்தியார் கேட்கும்போது, அவரது குறும்பிரம்பால் வாயைப்பயம் வாங்க நேரிடும், என்று மாணவர்கள் தமது படத்தைத் திருப்பிப் பிடித்திருப்பர் என்பது நம்பிக்கை. கதிரேசர் என்று மாணவர்களால் அழைக்கப்படும் ஆசிரியர் திரு செ.கதிரேசர்பிள்ளையின் சிறப்புகளில் அல்லது அவரது இயல்புகளில் ஒன்று, அவரது நீலஃபைலும், அதற்கே அளவாக இவட்டப்பட்ட பிரம்பும்தான் அவர் இரண்டையும் அளவறிந்துதான் பாவித்தவர். அவரது பிரம்பிடம் மாணவர்களுக்குப் பக்தி அதிகம். அது வெளியே தெரியாத நாட்கள் மாணவர்களுக்கு நிம்மதியான நாட்கள்தான். அது கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் இருக்கும் ஆமி காம்ப் மாதிரி. எப்போது ஆமி வெளியில்வரும் என்று தெரியாது. கவனமாக இருத்தல் நல்லது. கதிரேசர்பிள்ளை அவர்கள் தனது வகுப்பில் தமிழ்தான் படிப்பித்தவர் என்றாலும் அது ஒரு அசாதரண வகுப்பறை என்றே கூறலாம். தமிழை அடிப்படையாகக் கொண்ட பல விடயங்கள் அந்த வகுப்பறைக்குள் வரும், போகும். ஒருநாள் நாடகம் (பாடத்திட்டத்தில் இல்லாவிட்டாலும்) வரும். இன்னொருநாள் அறியாத ஒரு கவிதையும் அதன் இரசனையும் வரும். இத்தனைக்கும் வகுப்பைக் கட்டியாளக்கூடிய ஓர் அசாதரண ஆளுமையுடைய குரல் அவருக்கு இருந்தது ஒரு அனுகூலம் எனலாம். அவருடைய வகுப்பில் 'சிலபஸ்" முடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டெல்லாம் ஒருபோதும் வராது. அவர் அந்த பஸ்ஸையும் முடித்துவிட்டு வேறு பஸ்களிலும் மாணவர்களை ஏற்றித்திரிவார். இவை, இன்றைக்கும் அவரது மாணவர்கள் அவரை மறக்கமுடியாமல் இருக்க முக்கிய காரணங்கள் சில. அவரது வகுப்பறை ஒரு அமைதியான மண்டபம்போல் சில சமயங்களில் தோன்றும். சில சமயங்களில் அரசு கொலுவீற்றிருக்கும் மிடுக்கோடு தோன்றும். பிறிதோர் சந்தர்ப்பத்தில் காதல் ரசம் சொட்டும் சோலை போன்று தோன்றும். இந்த இரசாயண பௌதிக மாற்றங்களுக்கு அவரது நடிப்பாற்றலும், வகுப்பில் பல்வேறுபட்ட ரசனைகளைக் குவிக்கும் ஆளுமையும் காரணமாக இருந்தன. அவரது வகுப்பறைக்குள்ளால் புறப்பட்டு இன்று உலகின் பல பாகங்களிலும் தமிழ் வளர்க்கும் பலரை நான் அறிவேன். எந்தச் சந்தேகமும் இல்லாமல் அவர்களிடம் கதிரேசரின் ஆளுமை படிந்திருக்கிறது என அடித்துச் சொல்வேன். கண்டிப்பும், கண்டிப்பிற்குப் பின் ஒளிந்திருக்கும் கனிவும் அவரது இன்னொரு இயல்பு. ஒரு நாள் ஒரு மாணவன் கண்டிக்கப்பட்டால், அடுத்தநாள் அவனது பயம் வேறுவிதமாகக் குறைக்கப்படும். சகல மாணவர்கள் பற்றியும் அவர் சரியாகக் கணித்திருந்தார். யார் குழப்படி செய்வார்கள் எனத் தெரிந்து அவர்கள்மேல், தனது கண்ணாடியின் கீழான பார்வையை அனுப்பி ஒரு பாதுகாப்பு வலயத்தை உருவாக்கிவிடுவார். பிறகு குழப்படியாவது. ஒவ்வொரு மாணவரையும், அவரது திறமையை அடையாளம் காட்டிப் பாராட்டுவதோடு மாத்திரம் அவர் நின்றுவிடுவதில்லை. வேறு வழிகளில் பாராட்டுத் தேடிவரும்படியும் செய்வார். ஒரு தடவை எனது கட்டுரைக் கொப்பியை வேறு வகுப்பு மாணவிகள் (அப்போது எனக்குப் புல்லரித்த விடயம்) இரவல் கேட்டபோதுதான் அவர் கட்டுரைகளைத் திருத்துவதற்காக மாத்திரம் கொப்பிகளைக் கொண்டு செல்வதில்லை எனத் புரிந்தது. எனது கட்டுரை ஒன்றை அவர்களின் வகுப்பில் வாசித்துக் காட்டி, இப்படித்தான் கட்டுரை எழுதவேண்டும் என்றாராம் அவர். ஆனால் ஒருபோதும் எனது கவிதையை இப்படித்தான் எழுதவேண்டும் என யாருக்கும் முன்னுதாரணமாகக் கொண்டு சென்று காட்டியதில்லை. ஏனெனில், ஏதோ ஒருவித அச்சம் காரணமாக அவரிடம் நான் எனது காதல் ரசம் சொட்டிய இளவயதுக் கவிதைகளைக் காட்டியதில்லை. அவரது நாடகங்கள் பல தொடர்ச்சியாக அகில இலங்கையிலும் முதல் இடத்தைப் பெற்றன. இதற்கக் காரணம் இருக்கிறது. அவரது நாடகப் பிரதிகள் இதிகாசங்களில், முக்கியமாக இராமாயணத்தில் மக்களால் அதிகம் அறியப்படாத பகுதிகளைச் சுவையாக நாடகமாக்கி, அரங்கில் தருபவை. அவரது நெறியாள்கையில் நானும் (பெண் வேடமுமிட்டு) நடித்திருக்கிறேன் என்பது பெருமை. அவரது நாடகங்களில் நடித்ததன் மூலமே அந்தப் பாடசாலைக் காலங்களில் தமது புகழ்க்கொடியை நாட்டியவர்கள் பலர் உள்ளனர். அப்படிப் புகழ்க் கொடி நாட்டாவிட்டாலும், பல கொடிகளின் நிழலில் நான் நின்றிருக்கிறேன் என்பது எனக்குத் திருப்தி தருவது.
அவரிடம் கல்வி கற்ற மாணவர்களிற் பலர் அவரது கவிதைகளை வாசித்ததில்லை. முக்கிய காரணம் வகுப்பறைகளில் ஒருபோதும் தனக்கு அவர் இலவச விளம்பரம் தேடாதது. இன்னொன்று இப்போதைய பல கவிஞர் பெருமான்களைப் போல அவரிடம் தற்பெருமையோ, கவிதையால் பிழைக்கும் புத்தியோ இல்லாதது. அவர் எவ்வளவு தூரம் கவிதைகளை எழுதினார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர் நிறையவே எழுதியிருக்கவேண்டும் என்பது மட்டும் எனது விருப்பம். அவரது 'மரங்கள் நாட்டுவோம்" என்ற இசைப் பாடலைக் கல்லூரியின் மாணவ மாணவியரின் குரலில் கேட்ட யாரும் அவரது கவியாற்றல் பற்றிச் சந்தேகம் கொள்ளார். அவர் தனது கவிதை ஆற்றலைக்கூடச் சரியாக நெறிப்படுத்தாமல், மாணவர்களின் நலனை முதன்மைப்படுத்திச் செயற்பட ஒருவராயும் இருந்திருக்கலாம். ஆனால் அவரது மொழிமீதான ஆளுமை இன்றை எந்தக் கவிஞருக்கும் இருக்குமா என்று தெரியவில்லை. அந்த வகையில் அவர் பல கவிதைகளை எழுதாமல் இருந்தது எங்கள் துரதிர்~;டம்தான். பிற்காலத்தில் அவரது பார்வை மங்கலாகிப், பிறகு ஒரேயடியாகப் போய்விட்டது. இந்த அவசர உலகில் நிகழும் அனர்த்தங்கள் பலவற்றைப் பார்க்க வேண்டாம் என இயற்கை அந்த வாய்ப்பை அவருக்கு அளித்ததோ என்னவோ, நம்பிக்கைகள் தகர்ந்துகொள்ள அடுத்த நாளைப் பற்றிய நிச்சயமின்மை மனதை உரத்து அரிக்க இன்னொரு தேசத்தில் நான் வாழ்க்கiயில் அவரது மரணம் பற்றிய செய்தி வந்தது. இன்றுவரை மரணத்திற்குத் தப்பிய மானுடர் இல்லை. அவர் விதிவிலக்காக இருக்கவில்லை. இளமையின் நாட்களை இரைமீட்கையில் மனதுக்குள் புகைபோல எழுந்துவரும் துயரம் எனது மனதை மூடிவிட்டது. கண்களையும் கூட, வாயையும் கூட, என்னால் எதுவும் பேச முடியவில்லை. எனது மொழியின் மீதான் ஆளுமையிலேயே பெரும்பாலும் உணர்கிறவன் நான். மொழி என்கிற ஞானப் பாலை ஊற்றிய தாயை நான் இழந்தேன். துருவங்கள் சந்திக்கிற மாதிரித்தான் ஈழத்தமிழர்களின் வாழ்வும் நட்பும் ஆகிவிட்டது. எவரை எப்போது காண்போம் என்பது தெரியாது. எவரையாவது காண்போமா என்பதும் தெரியாது. ஒன்று நிச்சயம், பலரது தமிழறிவுக்குக் காரணமான கதிரேசரை இனிக் காணமாட்டோம். அவரைப் போன்ற இன்னொருவரையும் வாழ்நாளில் காணமுடியாது போகலாம்.
தூங்காத கண்கள்...

தொலைபேசி வாழ்க்கை என்னுடன் இரண்டறக்கலந்து நீண்டகாலமாகிவிட்டது. இப்போ அது இல்லாமல் நான் இல்லை. என்னால் முடியாது. ஆனாலும் வீட்டில் பலவேலைகளை நாங்களே செய்து முடிக்கவேண்டும். அப்படியொரு தீவிரமான வேiலைப்பொழுது ஒன்றில்தான் அவர் போன் செய்தார்.
வணக்கம்.வணக்கம். நான் ஒரு மகாஜனாவின் பழையமாணவர்.என்ற மறுமுனைக் குரலைக்கேட்டதும்; உசாராகிய என்னை அவரது சுய அறிமுகம் மேலும் உசாராக்கியது.
என்ன வேலை. சரி. நாளைக்கும் தொடரலாம் தானே!. மனசு இரங்க தொடர்ந்தேன்.
என்னுடைய பெயர் மகாதேவன். இடம் குரும்பசிட்டி. 63 வாக்கில் மகாஜனாவில் பயின்றேன். மகாஜனா பழையமாணவர் சங்கத்தின் கொழும்புக்கிளை உபதலைவராக இருக்கிறேன். இன்றுதான் பிரான்சுக்கு வந்தேன். இரண்டுநாட்கள் மட்டும் பிரான்சில் தங்கமுடியும் என்றார்.
அறுபத்திமூன்று காலப்பகுதிஎன்றால், எனது வாய்க்குள் அரையும்குறையுமாக விரல் ஊசலாடிக்கொண்டிருந்த காலம். சின்னக் கழிசானோடு பள்ளிக்கூடமே நினைக்காத பருவம். சரி போகட்டும்.
உங்கட காலத்தில நான் அங்க யில்லை. அதிபர் ஜெயரத்தினம் பாடசாலையை விட்டு விலகியபோதுதான் நான் வந்தேன் என்றேன்.நீங்கள் குரும்பசிட்டி என்றா..ல்........., என்னுடன் குரும்பசிட்டி நண்பர்கள் சிலர் படித்தார்கள் ...சிலவேளை உங்களுக்கு என்று நான் இழுக்க யார்... யார் என்ற என்றார் ஆர்வம் பொங்க.
என் நினைவில் வந்தவர்கள்... வாமதேவன், மனோகரன். இன்னனுமாருவர் மகேஸ்வரன்.மகேஸ்வரனோடு இன்னுமொரு மறக்கமுடியாத சம்பவமும் மீண்டெழுந்தது. மகேஸ்வரனுக்கு ஒரு அண்ணை இருந்தவர். பெயர் நினைவில்லை. நல்ல மனிதர். கெட்டிக்காரர். அவருக்கு யாரோ வேண்டத்தகாவர்கள் முகத்தில் அசிட் அடித்தவர்கள். என்று நான் சொல்லச் சொல்ல அவர் ம் கொட்டிக்கொண்டிருந்தார்.அந்த அசிட் அடித்த சம்பவம் எனக்குள் மறக்கமுடியாத பதிவு. இப்போது நினைத்தாலும் மனசு ஜில்லிடுகிறது என்று நான் வேதனையைக்கொட்ட ம் கொட்டிக்கொண்டிருந்த திரு. மகாதேவன் அந்த அண்ணன் நான் தான் என்றார்.
நான் விறைத்துப்போனேன். எனக்கு வார்த்தைகள் வரவில்லை. சில கணங்கள் தடுமாறினேன்.ஒருமாதிரி என்னைச் சுதாகரித்துக்கொண்டு தொடர்ந்தேன்.இளவயதில் என்னுள் பதிந்த கோரம் இன்னும் ஆழமாக இன்மொரு நிகழ்ச்சியும் காரணம்.ஏறக்குறைய பத்து வருடங்கள் இருக்கலாம். பிரான்ஸிலருந்து வானொலி நிகழ்ச்சிஒன்று ஒலிபரப்பாகின்றது. அதில்; கனடா வானொலி நிகழச்சியொன்று. இதில் கலந்து கொண்ட கட்டுவன் நேயர் ஒருவர் - பெயர் நினைவில்லை - உங்களுக்கு நடந்த அந்தச்ம்பவத்தை நீனைவு மீட்டிக்கொண்டிருந்தார். எனக்கு மகேஸ்வரன், பள்ளிக்ககூடவாழ்க்கை எல்லாமே மனத்திரையில் எழுந்துநின்றாடின.
விபத்துக்கள் எதிர்பாராமல் வருவை. ஆனால் இது விபத்தல்ல. பழிவாங்கவேண்டும் என்ற அரக்ககுணம்.சல்புரிக் அமிலம், ஐதரோக்குளோரிக் அமிலம் பற்றி நாங்கள் விழி பிதுங்க பிதுங்க விஞ்ஞான பாடத்திற்தில் கற்றுக்கொண்டிருந்தோம். இந்த அசிட்டைப்போய் மனிதரின் முகத்தில் வீசி அடித்தால்....! நினைக்கவே எங்களுக்க குரல்வளை நடுங்கியது. மகாதேவன் அண்ணருக்கு வீசிய அசிட் பக்கத்தில் நின்ற மரஞ்செடி கொடிகளையும் எரித்துப் பொசுக்;கியதாகவும்;, அவர் ஓட்டிவந்த ஸ்கூட்டர் கலர்மாறியமாதாகவும் பார்த்தவர்கள் சொல்லக்கேட்டு வெருண்டோம். மகேஸ்வரன் நீண்ட நாட்களாக பாடசாலைக்கு வரவில்லை. வைத்தியசாலையும் வீடுமாக மாறிமாறி அலைந்தததால் அவன் படிப்பும் தடைப்பட்டது.இதைநான் சொன்னபோது தொலைபேசியின் மறுமுனையில் அவர்குரல் தளுதளுத்ததை உணரமுடிந்தது.
நானும் உணர்ச்சிவசப்பட்டடேன்.
எங்களது தொலைபேசி இணைப்பு தவிர்க்கமுடியாமல் விட்டு விட்டுத் தொடர்ந்தது.திரு. மகாதேவன் தொடர்ந்தார்.பாடசாலைக்காலம் பற்றிய பசுமைகள் பலவற்றை இறக்கினார். தன்னுடைய மனைவியும் மகானாஜவில் தான் கல்விபயின்றவர் என்றும் தாங்கள் காதலித்தே கைப்பிடித்தோம் என்றும் சொன்னார்.
பிறகென்ன! பாடசாலைப் பசுமைபற்றி சொல்லவா வேண்டும்.!நான் ம் கொட்டிக்கொண்டிருநதேன்.தாங்கள் உயர்தரவகுப்பில் பயின்றுகொண்டிருந்தபோதுதான் மைதனத்திற்கு புல் பதித்;த கதையையும் சொன்னார். அதிபர் ஜெயரத்தினம்பற்றி கதைகள் பல பகிர்ந்தார்.
இரண்டு தினங்கள் மாறிமாறிக் கதைத்தும் அவரை நேரில் சந்திக்க முடியவில்லை என்ற ஏக்கம் என்னுள். பாரிஸிலிருந்து முந்நூறு கிலோ மீற்றர் தொலைவிலிருக்கிறேன். திரு. மகாதேவன் மறுநாளே ஜேர்மனி சென்று கொழும்பு திரும்பிவிட்டார். எனக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத வேதனை. திரும்ப திரும்ப அவருடன் தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.
கொழும்புவரை சுகமாக வந்து சேர்ந்ததாக சொன்னார். பயணம் மனதுக்கு இதமாக இருந்தது என்றார்.உங்களை நேரில் பார்க்கமுடியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது என்றேன். எனக்கு வருத்தமில்லை என்றார். எனக்கு சீ என்ற போனது.
நின்று நிறுதிட்டமாகச்சொன்னார். தம்பி எனக்கு எல்லாம் ஒன்று தான். 1973ம் ஆண்டு யூலை 25ம் திகதி நடந்த அந்த அசிற் சம்பவத்தில் எனது இரண்டு கண்களும் பார்வையிழந்துவிட்டன...
ஐயோ என்று நெஞ்சுக்குள் குழறினேன்
மனைவியே எனக்கு கண்கள். முப்பது வருடங்கள். எவ்வளவற்றதை;தாங்கிவிட்டேன். நம்பிக்கையே வாழ்க்கை. என்ற போது அவரது குரலில் உறுதி தொனித்தது.உறுதிமிக்க மகாஜனன் ஒருவருடனான தொடர்பு தொற்றிக்கொண்டதில் நானும் பெருமைகொண்டேன்.நாம் படித்த பாடசாலை என்ற இழை எப்படி யெல்லாம் பற்றிப்படர்கிறது.மகாஜனத்தாயே உனக்கு எனது வாழ்த்து.
- நா. வரதன்.
ஒரு பாத்துப்பாடடா
எனது பாட்டா தம்பர்
- கனக்ஸ் -
நான் ஆனா, ஆவன்னா சொல்லியே ஒரு உயிரைச் சாக அடித்தேன் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களோ தெரியாது. ஆனால் நம்பித் தான் ஆக வேண்டும். அப்போ எனக்கு வயது மூன்று இருக்கலாம். எனது பாட்டாவிற்கு ஏறக்குறைய எண்பது வயது. முழுமையான விவசாயி. கடினமாக உழைத்தவர், திடகாத்திர உடம்பு, நல்ல உயரம், செம் பொன்மேனி பற்கள் மாத்திரம் காலம் செய்த கோலத்தால் விடை பெற்று விட, வாய் கொஞ்சம் பொக்கு வாயாக,கதையில் மெல்லிய மழலை. நரைத்த மயிரில் உதிர்ந்தது போக எஞ்சியது உச்சியில் கொட்டைப் பாக்கு அளவு சிறிய குடும்மியாக காட்சி தந்தது. ஒருகாலும் படுத்திடாத என் பாட்டாவிற்கு ஏதோ ஒரு நோய் வந்து படுக்கையில் கிடத்தியது. மானிப்பாய் வைத்தியசாலையில் வைத்தியம். “இனி உள்ளக நோயாளியாhய் வைத்திருப்பதில் ஒன்றும் ஆகப் போவதில்லை வீட்டுக்குக் கொண்டு போய் அவர் விருப்பியதைக் கொடுங்கள் நிம்மதியாகப் போகட்டும்” என டாக்டர்கள் ஆலோசனை கூற வீட்டுக்குக் கொண்டு வந்து நாட்களை எண்ணத் தொடங்கியது சுற்றம். அவரோ பந்த பாசத்தைத் துறப்பதாக இல்லை. ஒரு மயக்க நிலை , அவ்வளவு தான். ஊர் உலகம் வௌ;வேறு ஆலோசனை கூற எனது தந்தையார்; அவற்றினை நிறைவேற்றத் தவறவில்லை. முதலில் ‘தானம்’ கொடுக்கச் சொன்னார்கள். தானம் கொடுத்தால் ஐயர் மாட்டை வீட்டுப்படலைக்கு அப்பால் கொண்டு போக உயிரும் போய்விடும் என்றார்கள். வீட்டிலே உள்ளதில் கிழட்டு மாடு ஐயருக்குத் தானமாகப் போனது. ஐயரும் விகடராமன் குதிரை ஓட்டிய மாதிரி “ முன்னே மூன்று போர் பற்றி இழுக்க பின்னே இருந்து இரண்டு போர் தள்ள- எந்நேரம் வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை மாதம் போம் காத வழி” என்றாராம் காள மேகப் புலவர் எப்படியோ மாட்டினை ஓட்டிச் சென்றாh.; பாட்டாவோ நடப்பதை வேடிக்கை பார்த்த படி கிடந்தார்.” கிழவனுக்குச் சேடம் இழுக்குது, கோரோசனை பாலில் கரைத்துக் கொடுத்தால் தொண்டை திறந்து விடும் ஆவி போய் விடும்” என இன்னொரு ஆலோசனை. அதுவும் நிறைவேற்றப் பட்டது. உற்றார் உறவினர் எல்லோரும் வரிசையில் நின்று பக்தி சிரத்தையுடன் கரண்டியால் பாட்டாவின் பொக்கு வாயில் பாலை ஊற்றினார்கள். இங்கே, பிள்ளையாருக்கு ஊற்றினார்களே, அதே போல ஊற்றுவதெல்லாம் உள்ளே தங்கு தடையில்லாமல் போனது .ஆனால் உயிர் மாத்திரம் போகவில்லை. என் பாட்டாவின் வேட்டி மூலைகளில் எல்லாம் எப்பவும் காசு முடிச்சு இருக்கும். இதை அறிந்த ஊர்ப் பெரிசு ஒன்று “ எடே கிழவனுக்கு காசு ஆசை விடுகுதில்லையடா, காசைக் கரைத்து வாயிலை ஊற்றிப் போட்டுப் பாருங்கோடா என்ன நடக்குது எண்டு” என்றது.அதுவும் நடந்தது.பாட்டா” சிற்றம்பலமும் சிவலோகமும் வேண்டாம், வெற்றம்பலமே போதும்” என நீட்டிக் கிடந்தார். “ எங்களுக்கு வேறை வேலை இல்லையா.? வாருங்கோடா போவோம், கிழம் போற நேரம் போகட்டும”; என்று அலுப்படைந்த சுற்றத்தில் ஒரு பகுதி நீங்கியது. மற்றையது கிழவன் போற இடத்துக்காவது புண்ணியத்தோடு போகட்டும் என முறை வைத்து தேவாரம், திருவாசகம், திருப்பு என்று சொல்வார்கள். தொடர்ந்து ஓதத் தொடங்கியது. அப்பொழுது தான் இந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. பாட்டா திடீரெனக் கண்ணை முழித்து என்னைப் பார்த்தார். பாட்டாவுக்கு என்னில் நல்ல பிரியம்.” தம்பி இங்கே வாதா” என்றார். நான் பயந்தேன்.”பாட்டா கூப்பிடுகிறார் இல்லே, போவேன்” என என்னை எல்லொரும் கிட்டப் போகுமாறு சொன்னார்கள். நான் போனேன். என்னை தன் ஒளி மங்கிய கணகளால் உற்றுப் பார்த்தபடி “ ஒரு பாத்துப் படியதா தம்பி” என்றார். நான் பேந்தப்பேந்த முழித்தேன். எனக்கோ ஒரு பாட்டும் தெரியாது. "அம்மா மெத்தப் பசிக்கிறதோ” “ருவிங்கிள், ருவிங்கிள் லிற்றில் ஸ்ராறோ” சொல்லித்தர ஒருவரும் அப்போ இல்லை. “ கிழவன் கேக்குது இல்லை, ஒரு பாட்டைப் படியேன்ரா மோனை”, இது தேவாரம் பாடியவர்களின் வேண்டு கோள். இக்கட்டான நிலமை.யோசித்தேன். ஒரே வழி. ஆனா, ஆவன்னா என ராகமுடன்
-2-( கர்ணகடூரம்) இழுத்தேன். “ ஒரு நல்ல பாத்துப் படியதா தம்பி” என பாட்டா மீண்டும் கேட்டார். கிழவனுக்குக் கேக்கேல்லை எடா, காதுக்குள்ளே சொல்லு” என்றனர். நானும் பவ்வியமாக பாட்டாவின் காதுக்குள்ளே " அனா, ஆவன்னா” எனக் கத்தினேன். அவ்வளவுதான். “சீ, போ, மூ-----“ என்ற பாட்டாவின் வாய் மீண்டும் மூடவில்லை. “ஐயோ, தம்பர் அப்பா ( அது தான் அவரின் பெயர்) போய் விட்டாயோ என எல்லோரும் ஒப்பாரி வைக்கத் தொடங்கினர். பாட்டியோ ஒடி வந்து என்னைக் கட்டிப் பிடித்து “என தாலியை அறுத்து விட்டியே எடா” எனக் கதறத் தெடங்கினார். உடனே சுற்றியிருந்த பெரிசுகள் எல்லம் என்னைக் கட்டிப் பிடித்து ஓலமிடத் தொடங்கின. என் நல்ல காலம் அம்மா இடையே புகுந்து” விடுங்கோடி என்ரை பிள்ளையை “ என என்னை இழுத்து எடுக்காவிட்டால் இன்றைக்கு இதனை நீங்கள் வாசிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்க மாட்டாது. “போகுது இல்லை, போகுது இல்லைக் கிழம”; என்று சொல்லிக் கொண்டிருந்த பந்துக்களுக்குப் பாசம் எப்படித்தான் பொது;துக் கொண்டு வந்ததோ, ஆறாகப் பெருகியது கண்ணீர், முந்தானை மூக்கைச் சீற உதவியது, நான்கைந்து நாட்களாக ஆயத்தம் செய்த முகாரி ராகக் கீர்த்தனைகள் ஆரோகண அவரோகணங்களுடன் சீராய் புறப்பட்டன.
எது எப்படி என்றாலும் அன்றைக்குத் தொடக்கம் உள்@ர் சமூகத்திலே என் கௌரவம் சற்று ஏறு முகமாகவே அமைய ஆரம்பித்து விட்டது. ஓழுங்கையிலே என்னைத் தட்டித் தவறி முதியவர் எவராவது கண்டால் அவசர அவசரமாக மறுபக்கம் பார்த்துக் கொண்டு போவதைக் காண முடிந்தது. போதாக் குறைக்கு நான் படிப்பதற்காகப் பாடசாலை போன அன்றும் பனம் பழம் விழக் காகம் இருந்தது போல அசம்பாவிதம் ஒன்றும் நடந்தது. எங்கள் பக்கத்து வீட்டிலே தான் நாகலிங்க உபாத்தியாயர் வசித்து வந்தார். எங்களுக்கு நெருங்கிய உறவு. ஓய்வு பெறுகின்ற வயது. சிறாப்பர் பள்ளிக் கூடம் தான் எமது ஆரம்பப் பாடசாலை. நாகலிங்க உபாத்தியாயர் அங்கே ஆசிரியர். ஆசிரியர்கள் ஏணிகளாக இருப்பார்கள் என்றும் மாணவர் அதன் மூலம் ஏறி மேலே மேலே போவார்கள் என்றும் சொல்வார்களே, நாகலிங்கம் உபாத்தியாயர் அந்த ஏணியின் அடிப் படியாகவே என்றும் இருப்பவர்.சும்மா சொல்லப்படாது, முப்பது வருடங்களாக வீடு, அரிவரி வகுப்பு என்று வாழ்ந்த மனுசன். பள்ளிக் கூடத்துக்கு என்னை நாகலிங்க உபாத்தியாயர் தான் கூட்டிச் சென்று தன் வகுப்பிலே முதல் ஆசனத்தில் இருத்தினார். பள்ளிக் கூடம் ஆரம்பமானது. வாத்தியார் கரும் பலகையிலே “ அ” எழுதி விட்டு இது என்ன எழுத்து எனக் கேட்டார். எனக்கு ஆனாஇ ஆவன்னா நல்லாகத் தெரியும் தானே. நான் உடனே “ஆனா” எனக் கத்தினேன்.என் தலை விதி. உபாத்தியாயார்,”இக், இக்” என்றார். நெஞ்சைப் பிடித்த படி கீழே விழுந்தார்.அவரின் கதையும் முடிந்தது.அண்ணலும் நோக்க அவளும் நோக்கபாட்டிதான் எனக்கு உணவு ஊட்டுவது வழக்கம்.மற்றைய பாட்டிமார்களில் இருந்து என் பாட்டி வித்தியாசமானவர். மற்றவர்கள் இராமனைப் பற்றியும் அருச்சுனனைப் பற்றியும் கதை சொல்வார்கள். என் பாட்டிக்கோ இராமனும் பாட்டா தான், அருச்சுனனும் பாட்டா தான்.பாட்டி கன்னியாயிருந்த போது பாட்டா ஆணழகன். வெற்றுடம்புடன் உழவுக்கு இரண்டு வெள்ளை வெளேரென்ற வடக்கன் எருதுகள், நெடிய கொம்புகளுடன் முன்னே செல்ல தோழில் கலப்பையுடன் காம்பீரமாகப் பாட்டா பின்னே செல்வது மிதிலை வீதியிலே இராமன் வில்லோடு சென்ற காட்சிதான், பாட்டி வேலியை விலக்கிப் பார்த்துப் பரவசமாகி, “தோள் கண்டார் தோளே கண்டாருடன்” பாட்டாவின் தொடைக்கு மேல் வேட்டி நின்றதால் கமலத்தன்ன கால்களையும கண்டு சொக்கி நின்றது ஒரு நாளல்ல ஒரு சில நாட்கள். அண்ணலும் நோக்க அவளும் நோக்க,.கொல்லைக்குப் போன பாட்டியின் அப்பனும் நோக்க பாட்டி மிதிலையை விட்டு அயோத்தி வாசியானாள். வேலிக்கு மேலாலே இன்னும் கொஞ்சக் காலம் பார்க்க விடாமல் சட்டுப் புட்டு எனக் கல்யாணத்தை நடத்தி விட்டார்களே என பாட்டிக்கு மாத்திரம் சற்றுக் கவலை.
பாட்டா கடினமான உழைப்பாளி என்றேன் பாட்டி அதைச் சற்று வித்தியாசமாய” எடே அந்த மனுசன்ரை கோவணத்தக்குள்ளே சாமி முளைச்சதடா” என்ற கூறுவா. எனக்கு என்னவோ ‘முருகன் சாமியையும் பிள்ளையாhர் சாமியையும்’ மாத்திரம் தான் எனது -3-அம்மா அறிமுகப் படுத்தியிருந்தா. இதென்னடா புதுச் சாமி எனப் பாட்டியிடம் கேட்டேன். “அட மடச் சாம்பிராணி, பாட்டா வேர்க்க வேர்க்க வேலை செய்வதாலே மண்ணும், வேர்iவுயம் சாமி விதையும் அங்கே சங்கமம் ஆகி விட்டன” என்பார். நீண்ட காலத்துக்குப் பின்னர் தான் பாட்டியின் ஹாஸ்ய உணர்வு புரிந்தது.பாட்டாவின் வைத்தியம்அந்தக் காலத்திலே வயல்களிலே உழுவதற்கும், சூத்திரக் கிணறு இறைப்பதற்கும் எருது மாடுகளையே பாவிப்பார்கள். அவை இரண்டு வகைப் படும். நமது நாட்டு உள்@ர் மாடுகளை ‘ வன்னி மாடுகள்’ என்பார்கள்.மற்றைய வகை ‘வடக்கன் மாடுகள்’ இவை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டவை. வெள்ளை நிறத்திலே, ஆறு அடிக்கும் மேலான உயரத்துடன், நீண்டு வளர்ந்த கொம்புகளுடன், உயர்நத் ஏரியோடு, மினு மினு என்ற உடலுடன் மிக்க காம்பீரமாக குதிரைகள் போன்று காணப் படும். பாட்டாவுக்கு மிருக வைத்தியமும் கொஞ்சம் கை வந்த கலை. ஆனால் என்றுமே அதற்காக ஊதியம் பெற மாட்டார். காசு வாங்கினால் சித்தியாகாது என்பது அவர் சித்தாந்தம். சில நிகழ்ச்சிகள் சொல்ல வேண்டும். ஊரிலே ஒருவருடைய எருது மாடு ஒன்று விழுந்து அதன் தொடை மூட்டு விலகி விட்டது. மாடு படுத்த படுக்கைதான் எவ்வளவு முயற்சித்தும் மாட்டினை எழுந்து நிற்கப் பண்ண முடியவில்லை. பாட்டாவை அழைத்துக் கொண்டு போய்க் காட்டினார்கள். பாட்டா உடனே இரு வடக்கயிறும் பத்துத் திடகாத்திரமான ஆண்களையும் கொண்டு வருமாறு கோட்டார். வந்ததும் மாட்டின் வயிற்றினைச் சுற்றி ஒருகயிற்றாலும், பாதித்த காலில் ஓரு கயிறையும் கட்டினார். வயிறில் கட்டிய கயிறை ஒருபகுதியனர் இறுகப் பிடிக்க காலில் கட்டிய கயிறை மறுபகுதியினரை முதலில் இழுத்து பின் மெல்ல மெல்ல விடச் சொன்னார். மாடோ கத்து கத்தென்று கத்தியது. சிறிது நேரத்தின் பின் பாட்டா “எல்லாம் சரி இனி மாடு எழுந்து திரியும்” எனக் கூறி விட்டுப் போனார். ஆனால் இரண்டு நாட்களின் பின்பு மாட்டுக் காரர் மீண்டும் வந்தார். மாடு இன்னும் அதே இடத்தில், அதே நிலையில் இருப்பதாகச் சத்தியம் செய்தார். பாட்டாவின் சய கௌரவம் பாதிக்கப் பட்டது. எங்கே பார்ப்போம், வா வீட்டுக்கு என உடனேயே அங்கு சென்றார். பாட்டா மாட்டுக்குக் கிட்டேபோனதை மாடு கண்டது தான் தாமதம், ஒரு மாயம் நிழந்தது. அந்த இடம் வெற்றிடமானது. மாட்டைக் காணவில்லை. அஸ்வமேத யாகக் குதிரை என்பார்களே. அது மூவுலகுக்கும் போய்விடுமாம். மாடு எப்படி எழுந்ததோ, எங்கே போனதோ யார் அறிவார். மாட்டுக் காரர் மாட்டினைத் தேடிக் கண்டு பிடித்து கெஞ்சிக் கூத்தாடி அதனை மீண்டும் வீட்டுக்குக் கொண்டு வர மூன்று நாட்கள் எடுத்ததாம்.
“ அக்குபங்சர்” என்று சீன மருத்துவ முறை ஒன்று உள்ளதே. ஊசியால் குது;துகிறார்களே. அது நம் நாட்டிலேயிருந்துதான் அங்கு போயிருக்க வேண்டும் என எண்ணுகிறேன். பாட்டா இதனைச் சற்று வித்தியாசமான முறையிலே மாடுகளுக்குச் செய்வாராம். மாடுகளுக்கு “முன்னடைப்பன்” என ஒரு வருத்தம் வருவதுண்டாம். அப்போ மூச்சு விட முடியாமல் பல மாடுகள் இறந்து விடுவது உண்டாம். பாட்டா வின் வைத்தியம் இந்த நோய் தீர்ப்பதற்குக் கண்கண்ட ஒளசதம். ‘இயங்கு’ என ஒரு மரம் உண்டு அதன் கிளைகளில் எல்லாம் நிறைய முட்கள். இம் முட்கள் மிகச் சுலபமாகத் தண்டில் இருந்து பிரியக் கூடியவை. இயங்கு மரத்தின் கிளை ஒன்றினை வெட்டி நோயுற்ற மாட்டின் மூஞ்சியல் பாட்டா வேகமாக அடித்து விடுவார். முட்கள் அதிகம் மாட்டின் மூஞ்சியல் குத்திய படி நிற்கும். மாடு தும்மச் சளி வெளியேறும். சிறிது நேரத்தின் பின்னர் மாட்டின் முகத்தில் உள்ள முட்களை எடுத்து விடுவார்கள். இப்படியாக தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் செய்தால் ஒன்றில் நோய் இருந்த இடம் தெரியாமல் போகும் அல்லது மாடு இருந்த இடம் காலியாகும்.
ஆடுமாடுகள் கன்றோ, குட்டியோ ஈனுவதற்குச் சில சமயங்களிலே க~;டப்படுவதுண்டு. உடலில் ஒரு பகுதி வந்துடன் நின்றுவிடுவதோ அல்லது முற்றாகவே ஈனுவதற்குக் க~;டப்பட்டோ உள்ள நிலையிலே பாட்டாவைத் தேடி வருவார்கள் ஊரார்கள். குட்டி அரைகுறையாக வெளியே நீட்டியபடி இருந்தால் பாட்டா ஒரு மகப்பேறு மருத்துவரின் இலாவகத்துடன் கையினை உள்ளே புகுத்திக் கன்றுடன் வெளியே வருவார். கன்று வெளியே தெரியாவிட்டால் பாட்டா, காட்டில் -4-வளரும் தாவரக் கொடி ஒன்று வைத்திருக்கிறார் அக் கொடியினை வாயடியில் வைத்து ஏதோ ஓதுவார் பினர் மூன்றுமுறை காறித் துப்பி விட்டு அக்கொடியினால் ஆட்டினதோ, மாட்டினதே வயிற்றினைச் சுற்றி இறுக்கக் கட்டிவிட்டுப் போய்விடுவார.; சிறது நேரத்தில் சுகப் பிரசவம் நடக்கும்.என்ன ஓதினார் என்பது இறுதிவரை மர்மமாவே இருந்தது. இந்த வைத்தியங்கள் எல்லாம் ஆண்தலை முறையாகவே செல்ல வேண்டும் என்பதில் பாட்டா மிகத் தீவிரமாக இருந்தவர். எனவே பாட்டியை இவ்விசயங்களில் சற்று எட்டவேதான் வைத்திருந்தார். இந்த சேவைகளுக்குப் பாட்டா எந்த விதமான ஊதியமும் பெறுவதில்லை எனக் கூறினேன். ஆனால் இதற்குப் பரதி உபகாரம் ஒன்று நடைபெறவதுண்டு.கன்று ஈன்றதும் மதலில் கன்றினை பால் ஊட்டவிடாமல் அப்பாலினைக் கநற்து விடுவார்கள். இப்பாலினைக் கடும்பு என்பாரகள். அதனைக் காச்சினால் வெண்கட்டிபோன்று வரும். மிகச் சுவையானதாக இருக்குமாம்.பாட்டாவிற்கு ஒரு பகுதியை அனுப்பி வைப்பார்களாம்.
இவை எல்லாம் பாட்டி நாளாந்தம் உணவூட்டும் போது சொன்ன தகவல்கள். புழுகு என நீங்கள் நினைத்தீர்களானால் அது பாட்டியின் கற்பனைத் திறத்திற்குப் பாராட்டு.
மகாஜனன் இணையத்தளம்மேலும் மெருகேற நிறைந்த மனிதவலு தேவைப்படுகிறது. புகலிடச்சூழலிலின் இயந்திரப்பொறிக்குள்;, பொதுவாழ்வுக்கு ஒவ்வெருவரும் மட்டுப்படுத்தப்பட்ட அளவே நேரத்தை ஒதுக்கமுடியும். அதிலும் நேரங்களை சிக்கனமாக்க, தேவைக்கேற்ற இடத்தில் மட்டும் பாவிக்கத்தெரிந்தவர்களால் மட்டுமே அதிகம் செயலாற்றமுடியும். செய்யவேண்டிய வேலைகள் குவிந்து கிடக்கின்றன.... மகாஜனன் இணையத்தளமும் தனதுநோக்கில் ஒரு சிறுபடிமட்டுமே முன்னேறியிருக்கிறது..இதனை மேலும் மெருகேற்ற அக்கறையுள்ளவர்கள், நேரத்தை செலவுசெய்ய தயாராகவுள்ளோர் எம்முடன்தொடர்புகொள்ளவும்..ஊர்கூடித் தேர் இழுப்போம் வாரீர்;;!!!
- மகாஜனன்

jeudi 23 août 2007

மகாஜனன் இணையத்தளம் அன்புடன் உங்களை வரவேற்கின்றது.
மகாஜனர் தமக்குள் ஒரு பிணைப்பினை ஏற்படுத்திக்கொள்ளல் அதனை வலுப்படுப்டுத்திக்கொள்ளல் அதன்மூலம் பயனுள்ள சில நற்கருமங்களைஆற்றமுற்படல் என்னும் நோக்கோடுஇவ் இணையத்தளம் ஆரம்பிக்கப்படுகிறது.
இத்தளத்தினுடாக மகாஜனர்களை இலகுவாக ஒன்றிணைக்க முடியும் என நம்புகிறோம்
தெல்லிப்பழையிலுள்ள மகாஜனாவின் வராற்றினை முடிந்தளவு பதிவாக்க முயற்சிப்போம்.
உலகெங்கிலுமுள்ள மகாஜன பழையமாணவரது செயற்பாடுகளை எல்லோருமறியச்செய்தல். அதன்மூலம் மகாஜனர்களை உற்சாகப்படுத்தல்.
மகாஜன படைப்பாளிகளை இனங்கண்டு ஊக்குவித்தல்.அவர்களது படைப்புக்களைப் பதிவாக்குதல்.
என தொடரும் எங்கள் முயற்சிக்கு உங்கள் ஆதரவினையும் நட்போடு எதிர்பார்க்கிறோம்.நன்றி
மகாஜனன்பாரிஸ் 14.04.2006
www.mahajanan.com

mercredi 22 août 2007